24 பிப்ரவரி, 2010

நல்லூர் முரசு

        உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 5ந்தாவது மாநில மாநாடு பிப்ரவரி 21 வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக நடந்து முடிந்தது. 
          மாநாட்டிற்கு முதுபெறும் எழுத்தாளர் தி.க.சி (தி.க.சிவசங்கரன்) அவர்கள், தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு கே.வைத்தியநாதன் அவர்கள், திரு.தீபநடராசன், திரு. கலாப்பிரியா, திரு.கழனியூரான், திரு. பூ.திருமாறன், இலங்கையைச் சேர்ந்த சிற்றிதழ் ஆசிரியர்களான அந்தனி ஜீவா, த.கோபாலகிருஷ்ணன், சேயன் இப்ராகிம் இன்னும் ஏராளமான சிற்றிதழ்களின் ஆசிரியர்கள், வாசகர்கள் என இலக்கிய கூடல் இனிதே நடந்தேறியது. 
      ஒரு கடிதமடல் கண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்ததோடு மன மகிழ்ச்சியோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த மாநாட்டின் வெற்றிக்கு வித்திட்ட தினமணி ஆசிரியர் திரு.கே.வைத்தியநாதன் அவர்களுக்கு இந்த மாநாட்டு அமைப்பின் மூலம் நன்றி கூறிக்கொள்கிறோம். தானும் ஒரு சிற்றிதழ் ஆசிரியராக தனது பத்திரிக்கை உறவை ஆரம்பித்த நெகிழ்ச்சியான அந்த காலம் முதல் சிற்றிதழ்களின் பங்களிப்பு வெகுசன பத்திரிக்கையால் தரமுடியாது என்பதை ஒப்புக்கொள்வதாக கூறினார். 
       “சாப்பாட்டிற்கு ஏதாவது கிடைக்காதா என ஏங்கியவாரு காட்டு வழியே  ஒருவன் தனது பயணத்தில் இருக்கிறான், அவன் பசிக் கொடுமையின் உச்சத்தில் இருக்கிறான். அந்த வேளையில் அவனை ஒரு கரடி துரத்துகிறது. உயிரைக்காப்பாற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் வேகமாக ஓடுகிறான் அதே வேகத்தில் செங்குத்தான மரத்தின் மேல் ஏறிவிட்டான் மரத்தின் உச்சியை அடைந்து விட்ட பெருமூச்சில் கரடியிடமிருந்து தப்பித்து விட்ட சந்தோசப்பட்ட அதே வேளையில் இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. மரத்தின் மேல் இருந்த மலைப்பாம்பு கண்டு வேறொரு மரத்திற்கு தாவுகிறான் அங்கே இரண்டு மூன்று பச்சைபாம்புகள், அங்கிருந்து இன்னொரு மரத்திற்கு தாவுகிறான் அங்கு அடத்தியாக இருந்த தேன்கூட்டை இவன் பிடித்ததால் கலைந்து போனது. பல ஆயிரக்கணக்கான தேனிக்கள் இவனை பந்தாடிவிட்டது. அந்த வேதனையில் இருக்கும் வேளையில் அந்த தேன்கூட்டில் இருந்து ஒரு துளி தேன் இவன் உதட்டில் படுகிறது அதை தன் நாவால் லாவகமாக சுவைக்கிறான் அந்த தேன் போல் தான் இந்த சிற்றிதழ்கள்.”   என்கிற கதையோடு சேவைமையம் ஒன்றை சோர்வில்லாமல் நடத்தி வரும் பூ.திருமாறன் பேசத்துவங்கினார்.
           கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியதுவம் கொடுத்து வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இன்றைய வெகுசன இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இலக்கியம் என்பதை ஒப்புக்காக மட்டுமே இடம் கிடந்தால் திணிக்கிறார்கள். காலப்போக்கில் வாசிக்கும் பழக்கம் நம்மை விட்டு போய்விடுமோ என்று கூட அஞ்சத்தோன்றுகிறது. இது போன்ற சிற்றிதழ்கள் இன்னும் நிறைய வரவேண்டும் என்ற ஆசையை வைத்து நிறைவு செய்தார் திருமாறன்.
   இரண்டு விரல்களால் எழுத்திக்கொண்டிருந்த காலம் போய் பத்து விரல்களால் எழுதும் காலம் வந்து விட்டது. ஆகவே இணையத்தள சிற்றிதழ்களையும் நாம் ஒன்று திரட்ட வேண்டும். எதில் எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல என்ன எழுதுகிறோம் என்பதுதான் முக்கியம். நல்ல எழுத்துக்கள் பேசப்படும். இது கரிசல் எழுத்தாளர் கழனியூரான் அவர்களின் வேண்டுகோளாக இருந்தது.
                தினமணி நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்கள் பேசும்போது சிற்றிதழ்களின் அயராத இலக்கிய பணியை, அதன் தாக்கத்தின் வீரியத்தையும் பற்றி தெளிவாக உணர்த்தினார். விளம்பரம் சார்ந்து வரக்கூடிய பத்திரிக்கைகள் எந்தக் கொள்கைக்காக முன்னெடுத்துச் செல்லவேண்டுமோ, அதை அடகு வைக்கும் நிர்பந்தமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவர். தான் ஆரம்பத்தில் சி்ற்றிதழ் ஆசிரியராக இருந்த அந்த சூழ்நிலையை விளக்கினார். அவர்களுக்கு இருக்கும் அந்த எழுத்து துணிச்சல் வெகுசன பத்திரிக்கைகளுக்கு இருக்காது என்பதை ஆணித்தரமாக கூறினார். 
               இலக்கிய உலகில் சிற்றிதழ்களின் வளர்ச்சி மிகவும் அவசியம் மிகத் தரமான படைப்புகளுடன் இன்னும் நிறைய சிற்றிதழ்கள் வரவேண்டும். தொடர்ந்து அவை வரவேண்டும். சிற்றிதழ்களின் மூலம் வளர்ந்தவர்கள் தான் இன்றைய பெரும் எழுத்தாளர்களாக இலக்கிய வானில் உலாவந்து கொண்டிருக்கிறார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.
                 உதசிசங்கத்தின் தலைவர் வதிலை பிரபா முன்வைத்த தீர்மானத்தில் ஒன்றான சிற்றிதழ் எழுத்தாளர்களுக்கும் கலைமாமணி விருது கொடுக்கவேண்டும் என்பதை மேற்கோள்காட்டி பேசிய தினமணி ஆசிரியர் நமக்கு இந்த விருதுகள் தேவையில்லை. முகம் தெரியாத வாசகர்கூட்டம் நமக்கு தரும் அங்கீகாரம் நோபல் பரிசுக்கு சமம். வழங்குவது கலைமாமணி விருது அல்ல சிரிப்பு நடிகர்களுக்கும், கவர்ச்சி நடிகர்களுக்கும் மத்தியில் நமது இலக்கியம் சிதறவேண்டாம். என்றார்.
                  நிகழ்ச்சியில் ஏராளமான சி்ற்றிதழ்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இலக்கியச்சாயலுடன் நடைபெறும் இம்மாதிரியான நிகழ்ச்சிக்கு பொதுவாக பார்வையாளர்கள் குறைவுதான் என்றாலும் இந்த நிகழ்ச்சிக்கு சற்று அதிகமாகவே பார்வையாளர்கள் வந்திருந்தனர். இதுபோன்ற நிகழ்வுகள் இனிஒரு சந்தர்பத்தில் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆவலாக இருந்தது.


மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக உலகத்தமிழ் சி்ற்றிதழ்கள் சங்க 5வது மாநில மாநாட்டின் பொதுக்குழு அமர்வு நடைபெற்ற போது எடுத்தபடம்.

மாநாட்டு நிகழ்ச்சியின் துவக்கத்திற்கு முன்பாக மூத்த எழுத்தாளர் திரு.தி.க.சி அவர்களுடன் தினமணி நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன் மற்றும் இலங்கை பத்திரிக்கையாளர்கள் த.கோபாலகிருஷ்ணன், அந்தனி ஜீவா மற்றும் வாசகர்கள்.
மூத்த எழுத்தாளர் திரு.தி.க.சி அவர்களுக்கு பாரதிஇலக்கிய விருது வழங்குகிறார் தினமணி ஆசிரியர் அவர்கள்.


நல்லூர் முரசு நிர்வகஆசிரியரும், மாநாட்டு அமைப்பாளருமான திரு.ஜாகிர்உசேன் தினமணி ஆசிரியரிடமிருந்து நினைவுப்பரிசு பெறுகிறார்.


நல்லூர் முரசு பொறுப்பாசிரியரும், மாநாட்டு அமைப்பாளருமான திரு.சொக்கம்பட்டி ரஹீம் தினமணி ஆசிரியரிடமிருந்து நினைவுப்பரிசு பெறுகிறார்.


மாநாட்டு நினைவாக குறும்பட இயக்குநர் அ.செல்வதரன், இலங்கை பத்திரிக்கையாளர் கோபாலகிருஷ்ணன், நல்லூர்முரசு பொறுப்பாசிரியர் சொக்கம்பட்டி ரஹீம், உலகசிற்றிதழ்கள் சங்கத்தின் செயலாளர் சொர்ணபாரதி,  பொருளாளர் நந்தவனம் சந்திரசேகரன், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், உ.த.சி.சங்கத்தின் தலைவர் வதிலை பிரபா, நல்லூர் முரசு நிர்வாக ஆசிரியர் எம்.எஸ்.ஜாகிர் உசேன்.

மாநாட்டு நிகழ்ச்சியில் தி்.க.சி அவர்களின் ஏற்புரை .....

9 பிப்ரவரி, 2010

நல்லூர் முரசு

விலைவாசி உயர்வு - தீர்வு என்ன?

       உணவுப் பொருட்களின் விலை கடந்த சில மாதங்களில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் பருப்பு, சீனி போன்ற பொருட்களின் விலை இரு மடங்கு, மூன்று மடங்கு என உயர்ந்துள்ளது.
   உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக சமாதானம் கூறப்பட்டாலும், விவசாய நாடான இந்தியாவில் விலை உயர்ந்திருப்பது சற்று கவலை தரும் அம்சமே.
உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு, விளைச்சல் பற்றாக்குறையே காரணம் என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. பருவநிலை மாற்றம், காலம் தப்பிப் பெய்யும் மழை, வறட்சி, விளை நிலங்களின் பரப்பளவு குறைவு என பலகாரணங்கள் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்திற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.
        உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு ஊக வணிகம் தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் இதில் முழு உண்மை இருப்பது போல் தோன்றவில்லை. ஏனெனில் ஊக வணிகத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள பருப்புவகைகளின் விலை இரண்டு மடங்குகள் உயர்நதுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பின் உண்மையான காரணம் தான் என்ன? ஆராய்ந்து பார்த்தால் ஒரு உண்மை பளிச்செனத் தெரியும். தற்போது நமது நாட்டில் விவசாயம் ஒரு லாபம் தரும் தொழிலாக இல்லை. பல்வேறு காரணங்களால் விவசாயம் ஒரு நட்டம் தரும் தொழிலாகவே மாறிவிட்டது. நன்றாக மழை பெய்து அதிகமான விளைச்சல் ஏற்பட்டால், விலை அதல பாதாளத்தில் விழுந்து விடுகிறது. அப்போதும் விவசாயிக்கு நட்டம்தான். நன்றாகப் பயிர்கள் வளர்ந்து அறுவடை செய்யும் நேரத்தில் அடை மழை பெய்து விட்டால் பயிர்கள் பெருமளவு சேதமடைந்து விடுகின்றன. அப்போதும் விவசாயிக்கு நட்டம்தான். எனவே விவசாயிகள் போட்ட முதலையும் இழந்து அரசிடம் நிவாரணம் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலை காரணமாக தொழிலில் நட்டம் ஏற்பட்டு வாங்கிய கடனை அடைக்க முடியாத விவசாயிகள் பலர் ஆந்திராவிலும், மகாராஷ்டிராவிலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
       விவசாயத் தொழிலுக்குத் தற்போது ஆட்கள் கிடைப்பதில்லை. வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், உள்நாட்டில் கட்டுமானத் தொழிலின் அபிரிதமான வளர்ச்சி, கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்றவை காரணமாக நாற்று நட்டல், களை பறித்தல், அறுத்தல் போன்ற விவசாயப் பணிகளுக்குப் போதிய ஆட்கள் கிடைப்பதில்லை. கிடைக்கின்ற ஆட்களுக்கு அதிகக் கூலி கொடுத்து உற்பத்தி செலவும் கூடிவிடுகின்றது. இதுபோன்ற நெருக்கடிகள் காரணமாக பல சிறு விவசாயிகள் தங்களது நிலங்களை எதையும் பயிரிடாது தரிசாகப் போட்டுள்ளனர். நகர்ப்புறங்களில் உள்ள பல விவசாயிகள் நகரை ஒட்டியுள்ள தங்களது விவசாய நிலங்களை வீட்டு மனைகளாகப் போட்டு விற்று விட்டனர். பத்துப் பதினைந்து ஆண்டுகள் விவசாயம் செய்தாலும் கிடைக்காத வருமானம் வீட்டு மனைகளாக விற்கும் போது அவர்களுக்கு ஒரு சேரக்கிடைத்துவிடுகிறது. எனவே விவசாய நிலப்பரப்பு கடந்த இருபது ஆண்டுகளில் படிப்படியாகக் குறைந்து உணவுப் பொருட்களின் உற்பத்தியும் குறைந்து விடுகிறது.
    இந்நிலையில், விவசாயிகளுக்கு கட்டுபடியாகக் கூடிய கொள்முதல் விலையினை வழங்க அரசு தயக்கம்காட்டுகிறது. இதற்குக் காரணம் கொள்முதல் விலையை உயர்த்தினால் பொருட்களின் விற்பனை விலையும் கூடி சாதாரண மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சமே காரணமாகும்.
     ஒரு உதாரணம் பார்ப்போம் தமிழக அரசு தற்போது ஒரு குவிண்டால் நெல்லுக்கு (100கிலோ ரூ1050/- விலை நிர்ணயம் செய்து நெல்ல விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்குகிறது. 100 கிலோ நெல்லை அரியாக்கினால் 60 கிலோ கிடைக்கும் எனவே 1 கிலோ அரியின் அடக்க விலை ரூ.17.50 என ஆகிறது. அரசு நிர்ணயித்த விலையை ஒட்டியோ, அல்லது சற்று அதிகமாகவோ தான் மொத்த வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்குவார்கள் இதன் காரணமாக மொத்த வியாபாரிகளின் அடக்க விலையே ரூ.17.50க்கு மேல் இருக்கும் போது, பல கட்டங்களைக் கடந்து சில்லறை வர்த்தகத்திற்கு வரும்போது ஒரு கிலோ அரிசியில் விலை ரூ.20/- ஐத் தாண்டி விடுகிறது. உடனே அரசயில் கட்சிகள் அரிசி விலை உயர்ந்து விட்டது என்று கூக்குரல் எழுப்புவார்கள். விவசாயிகளுக்கு கட்டுபடியாகிற விலை கொடுக்கும் போது, அரிசி விலை சற்று உயரத் தான் செய்யும். வேறு வழியில்லை இதனை நுகர்வோர் புரிந்து கொள்ள வேண்டும். அரசும் மக்களுக்கு இந்த உண்மையை உணர்த்த வேண்டும்.
  விவசாயிக்கு கட்டுபடியாகிற விலை கொடுத்தால் விலைவாசி மிகக்குறைந்து அளவிற்குத் தான் உயரும். மாறாக கட்டுபடியாகிற விலை வழங்கத் தவறினால், விவசாயிகள் ஊக்கம் இழந்து நிலங்களைத் தரிசாகப் போட்டு விடுவர். உற்பத்தி குறையும். அதன் காரணமாக விலை பன்மடங்கு உயரும். இதனால் விவசாயிகளும், நுகர்வோரும் ஒரு சேரப் பாதிக்கப்படுவர். பெருத்த லாபம் அடைவது மொத்த வணிகர்கள்தான் இந்த யதார்த்த நிலையை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும்.
    உற்பத்தி குறைவு காரணமாக ஏற்படும் உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு பருப்புவகைகள், சீனி, எண்ணெய்வித்துக்கள் ஆகியவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. இது ஒரு தற்காலிகத் தீர்வு தான். நிரந்தரத் தீர்வாக இருக்கமுடியாது. இது விலைவாசியைக் குறைக்காது. ஏனெனில் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களை கப்பலில் கொடு வரும் செலவினங்கள் (வரி, ஏற்று, இறக்குக் கூலி, போக்குவரத்து, சேதாரம் முதலியன) காரணமாக அப்பொருட்களை குறைவான விலைக்கு விற்க இயலாது.
    இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு தனது தேவைகளுக்கு இறக்குமதியை நம்பியிருக்க முடியாது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவது ஒன்றே மிகச்சிறந்த வழியாகும். உணவுப் பொருட்களில் குறிப்பாக அரிசி, கோதுமை, பருப்புவகைகள், எண்ணெய் விததுக்கள், சீனி ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்குவதே ஒரு மாற்று வழி, இரண்டாவது பசுமைப்புரட்சி நாட்டில் ஏற்பட்டாக வேண்டும்.உணவு உற்பத்தியைப் பெருக்க விவசாயிகளுகு்கு அரசு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும். அவர்ளுக்கு கட்டுபடியாகிற கொள்முதல் விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் அத்தியாவியப் பொருட்கள் அனைத்தும் அரசு மக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்க வேண்டும்.
         வெளிச்சந்தையைப் பொறுத்த அளவில் அரசின் கட்டுபாடு இல்லை என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. சற்றுத் தட்டுப்பாடு ஏற்பட்டாலே, பெரும் வணிகர்கள் உணவுப் பொருட்களை பதுக்கி விலைகளை தாறுமாறாக ஏற்றி விடுகிறார்கள். கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். பெரும் வணிகர்களைக் கட்டுக்படுத்தவும், பதுக்களை வெளியே கொண்டு வரவும் அரசுகள் போரிய நடவடிக்ககைள் எடுக்க வில்லை என்பது பெரும் கவலை அளிக்கும்     அம்சமாகும். அரசு இந்த விஷயத்தில் விரைந்து செயல்பட வேண்டும்.
      உற்பத்தி்ப் பெருக்கம், பதுக்கலை ஒழித்தல் இந்த இரண்டு அம்சங்களில் தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

2 பிப்ரவரி, 2010

நல்லூர் முரசு.

முஸ்லிம் ஆட்சி அன்னிய ஆட்சி அன்று.....
       
    “பாஞ்சாலச் சிங்கம்” எனப் போற்றப்பட்ட திரு.லாலாலஜபதிராய்  நாட்டின் விடுதலைக்குப் போராடிய முன்னணித் தலைவர்களுள் ஒருவர்.  பாலகங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே போன்ற  தலைவர்களின் சம சாலத்தில் வாழ்ந்தவர்.

    1907 ஆம் ஆண்டு அவரை ஆங்கில அரசு நாடு கடத்தியது. அதன்  காரணமாக அவர் சில ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தார்.

    1928 ஆம் ஆண்டு சைமன் குழுவின் வருகையைக் கண்டித்து லாகூரில்  நடைபெற்ற கண்டனப் பேரணிக்குத் தலைமை தாங்கிய அவரையும்,  ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானவர்களையும் காவல்  துறையினர் தடியடி நடத்திக் கலைத்தனர். இதில் திரு லாலா  லஜபதிராயும் படுகாயமுற்று சில நாட்கள் மருத்துவ மனையில் சிகிட்சை  பெற்றும் சிகிட்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

    திரு லாலா லஜபதிராயின் மரணம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும்  கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தடியடிக்கு உத்திரவிட்ட லாகூர் நகரின்  காவல் துறை  உயர் அதிகாரியான திரு சாண்டர்ஸை ராஜகுருவும்  பகத்சிங்கும் 17.12.1928 அன்று கொன்றனர். இது வரலாறு.

    திரு. லாலா லஜபதிராய் அமெரிக்காவில் தங்கியிருந்த போது 1915  ஆம் ஆண்டு “யுவபாரதம்” என்ற நூலை எழுதினார். இந் நூலின் இந்தியாவின் புராதன வரலாறு, முஸ்லிம்கள் ஆட்சி, வெள்ளையர்கள் இந்திய ஆட்சியைக் கைப்பற்றிய விதம், இந்திய தேசிய காங்கிரஸின் தோற்றம், அந்த இயக்கத்தின் துவக்க கால குறிக்கோள்கள் ஆகியன பற்றி விரிவாக எழுதியுள்ளார். இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட இந்த நூலுக்கு ஆங்கில அரசு தடைவிதித்ததுஇந்தியாவில் விற்பனைக்கு வந்த இந்நூலின் பிரதிகளை ஆங்கில அரசு பறிமுதல் செய்தது. பெரும் கிளர்ச்சிக்குப் பின் 1926 ஆம் ஆண்டு தான் இந்த நூலுக்கான தடை உத்தரவினை ஆங்கில அரசினர் விலக்கிக் கொண்டனர்.

   9.9.1937 அன்று இந்நூலை தமிழாக்கம் செய்து சென்னை மாநில முதலமைச்சராகப் பதிவி வகித்த திரு.குமாரசாமிராஜா வெளியிட்டார்.

      இந்நூலில், சுமார் 800 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் திருநாட்டை ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள திரு.லாலாலஜபதிராய்முஸ்லிம் ஆட்சி அந்நியர் ஆட்சி அன்றுஎன்று தன் ஆணித்தரமான வாதங்களால் நிறுவியுள்ளார். இது சம்பந்தமாக இந்நூலில் அவர் எழுதியுள்ள கருத்துக்கள் அப்படியே கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

     எனினும் இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியை அன்னிய ஆட்சி என்று சொல்வது சரியாகாது. முதன் முதலில் படை எடுத்து வந்த முஸ்லிம்கள் அன்னியர்கள் என்பதில் சந்தேகமில்லை. (நார்மானியரும், டேனியரும் முதல் முதலி்ல் இங்கிலாந்துக்கு வந்த போது அன்னியர்களாகவே இருந்தனர்) ஆனால் அவர்கள் இந்தியாவில் குடியேறி, இந்தியாவையே தங்கள் தாய் நாடாகக் கொண்டு, இங்கேயே வீடு வாசல்கள் கட்டி, கல்யாணம் செய்து குழந்தைகள் ஈன்று வளர்த்து வந்தார்களாதலினால் இந்த நாட்டின் சொந்தப் புதல்வர்களாக ஆகிவிட்டனர்.

  டில்லியிலும் பிற இடங்களிலும் இன்றைய தினம் உள்ள மொகலாயர்களையும், பட்டாணியர்களையும் போலவே அந்நாளிலிருந்து அக்பரும், ஔரங்கசீப்பும் இந்தியர்களே  யாவர். கிரேட் பிரிட்டனில் நார்மன் வில்லியம் (William The Conqueror)  ஆரஞ்சு வில்லியம் (William of Orange) இவர்களுடைய சந்ததியர்கள் எப்படி அன்னியர்களாக மாட்டார்களோ, அவ்வாறே இந்தியாவிலும் ஷெர்சாவும், இப்ராகிம் லோடியும் அன்னியர்களாக மாட்டார்கள். தைமூரும் காரிஷாவும் ஆமத்ஷா அப்தாலியும் இந்தியாவின் மீது படை எடுத்த போது அவர்கள் இங்கே இந்திய முஸ்லிம்களால் ஆளப்பட்ட இராஜ்யத்தையே தாக்கினார்கள். அவர்கள் ஹிந்துக்களுக்கு எவ்வளவு தூரம் பகைவர்களோ அவ்வளவு அம்முகம்மதிய அரசர்களுக்கும் பகைவர்களாயிருந்தனர்.

       பதின் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தி வரையில் இந்தியாவில் அரசியல் அதிகாரம் வகித்த முஸ்லிம்கள் இந்தியர்களேயாவார்கள். அவர்கள் பிறந்தது இந்தியாவில். மணம் புரிந்தது இந்தியாவில். அவர்கள் இறந்ததும் புதைக்கப்பட்டதும் இந்தியாவிலேயே இந்தியாவில் அவர்கள் வசூலித்த வரிப்பணத்தின் ஒவ்வொரு காசும் இந்தியாவிலேயே செலவழிக்கப்பட்டதுஅவர்களது சைன்யமோ முழுவதும் இந்திய சைன்யமாகும். ஹிந்துஸ்தானத்துக்கு வெளியிலிருந்து புதிய குடும்பங்கள் வந்து இந்தியாவில் குடியேறுவதற்கு அவர்கள் அனுமதித்தார்கள். ஆனால் இந்தியாவிலேயே நிலையாகத் தங்கி இதையே தங்கள் தாய் நாடாகக் கொள்ள விருப்பமில்லாதவர்களை அவர்கள் உத்தியோகங்களில் அமர்த்தியது மிக அபூர்வமாகும். ஹி்ந்துக்களிடம் அவர்களுக்கு விரோத பாவம் ஏதேனும் இருந்திருப்பின், அது சமய சம்பந்மானதேயல்லாமல் அரசியல் துறையைச் சார்ந்ததன்று. பிறப்பிலிருந்தே முஸ்லிம்களாயிருப்போரைக் காட்டிலும், புதிதாக அம்மதத்தைத் தழுவியவர்களுக்குச் சில சமயம் விஷேச சலுகையும் காட்டப்பட்டது. அக்பர் இந்த மத வேற்றுமையை அடியோடு தொலைத்து விட்டார்.

       ஆனால் இந்திய முஸ்லிம் அரசர்களுக்குள்ளே  மிகுந்த மதவெறி பிடித்தலும் கூட தற்போது இந்தியாவை ஆளும் பிரிட்டிஷாரைப் போல் சாதிக் கர்வமும், சுதேசிகளுடன் கலந்து பழகாத குறுகிய மனப்பான்மையும் கொண்டிருக்கவில்லை முஸ்லிம் ஆட்சியின் கீழ் சாதிப் போராட்டம் எப்போதேனும் தலை காட்டிற்றென்றால் அது ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் எழவில்லை. முஸ்லிம்களுக்குள்ளேயே அப்போராட்டம் ஏற்பட்டது. துக்ளக்களுக்கும், பட்டாணியருக்கும் ஏற்பட்ட போராட்டங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

      ஷெர்ஷா, அக்பர், ஜிகாங்கீர், ஷாஜஹான் முதலியோர் போன்ற மன்னர்களின் ஆட்சியில் அரச குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு அடுத்த படியாகப் பெரிய உத்தியோகப் பதவிகள் எல்லாவற்றுக்கும் ஹிந்துக்களே உரிவர்களாயிருந்தனர். அவர்கள் மாகாண அதிபதிகளாகவும், சைன்யங்களின் தளபதிகளாகவும், ஜில்லா அதிகாரிகளாகவும் பதவி வகித்திருக்கின்றனர். சுருங்கக் கூறினால் அரசியல்  துறையிலோ, சமூகத் துறையிலே ஹிந்து முஸ்லிம்களுக்குள் எவ்வகை வேற்றுமையும் பாராட்டப்படவில்லை. அரசியலையும், பொருளாதாரத்தையும் பற்றிய வரையில் ஹிந்து அரசைப் போலவே முஸ்லிம் அரசும் சுதேச ஆட்சியேயாகும்

   பொது ஜனங்களை நிராயுத பாணிகளாக்க முஸ்லிம்கள் முயன்றது கிடையாது. ஆயுதங்களின் உற்பத்தியையோ, இறக்குமதியையோ அவர்கள் தடை செய்தது இல்லை. அரேபியா, பாரசீகம், அல்லது ஆப்கானிஸ்தானிலிருந்து அவர்கள் உத்தியோகஸ்தர்களை கொண்டு வரவும் இல்லை. லங்காஷயர் தொழில்களைப் போல் அவர்கள் பாதுகாக்கவேண்டிய அன்னிய நாட்டுத் தொழில் எதுவுமில்லை. எனவே இந்தியாவில் செய்த சாமான்களுக்கு எதிர்வரி விதிக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படவில்லை.

        அவர்கள் வந்த போது தங்களது சொந்த பாஷையையும், இலக்கியத்தையும் தங்களுடன் கொண்டு வந்தது உண்மையே. சிறிது காலத்திற்கு அவர்கள் அரசாங்க காரியங்களை எல்லாம் தங்கள் சுய பாஷையிலேயே நடத்தியிருக்கலாம். ஆனால் விரைவிலேயே அவர்கள் புதிய இந்திய மொழி ஒன்றை ஏற்படுத்திக்கொண்டார்கள். உருது அல்லது ஹிந்துஸ்தானி என்று தற்போத வழங்கும் அப்புதிய மொழி அடிப்படையில் சுத்த இந்தி மொழியே ஆகும்.  பாரசீகம் அல்லது ஆப்கானிஸ்தானத்தி்ன் தொழிலாளி வகுப்பாரின் நன்மை குறித்து இந்திய முஸ்லிம் மன்னர்கள் எவ்விதத்திலும் கவலை கொண்டிருக்க வில்லை. வெளிநாட்டினர் எவரேனும் அவர்களுடைய ஆதரவைப் பெற விரும்பினால் அவர்கள் முதலில்இந்தியாவுக்கு வந்து குடியேற வேண்டும். எனவே முஸ்லிம்களின் அரசாங்கம் இந்திய அரசாங்கமேயன்றி ஒரு நாளும் அன்னிய அரசாங்கம் அன்று”.

          முஸ்லிம் மன்னர்கள் அந்நியர்கள் நம்முடைய பண்பாடு கலாச்சாரத்தை அழித்தவர்கள் என்று பிரச்சாரம் செய்து வரும் சங் பரிவாரங்களுக்கு தக்க பதில் அளிக்கும் விதத்திலேயே திரு.லாலா லஜபதிராயின் கருத்துக்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் மன்னர்களின் ஆட்சிக்குப்பின்னர் (மொகலாயர்களின் ஆட்சிக்குப் பின்னர்) இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆங்கிலர்களின் ஆட்சியை ஒப்பு நோக்கியே, திரு.லாலா லஜபதிராய் இந்த புத்தகத்தில் முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி பற்றி கருத்துத் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

2019 டிசம்பர்