6 செப்டம்பர், 2012

தமிழ் ஈழமும் முஸ்லிம்களும் - பகுதி 5


கிழக்கு வடக்கு மாகாண முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் பெரும் பாதிப்பிற்கு உள்ளான போது அவர்களது அவல நிலையினை படம் பிடித்துக் காட்டும் விதமான அந்நாட்டுக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் எழுதிய ஒரு கவிதையைக் கீழே கொடுத்துள்ளேன்.

“உங்கள் வீட்டையே திருடிக் கொண்டோம்
உங்கள் பிள்ளைகளின் உணவைப் புசித்தோம்
உங்கள் தொழுகைப் பாயில் புணர்ந்தோம்
மீசான் கட்டையில் அடுப்பு மூட்டினோம்
எச்சில் கைகளைத் துடைப்பதற்காக
உங்கள் புனித நூல் களைக் கிழித்தோம்
பாங்கொலி இன்றி முடிந்த அவ்விரவில்
தேவதைகள் தொலைந்து போயின”

விடுதலைப் புலிகளின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான கிழக்கு மாகாண முஸ்லிம்கள், சுய பாதுகாப்பில் ஈடுபட வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஒவ்வொரு ஊரிலும் முஸ்லிம் இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டக் குழுக்களை நிறுவினர். முஸ்லிம்களைப் பாதுகாக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டனர். இவர்களுக்கு இலங்கை அரசு ஆயுதங்களை வழங்கியது. ஊர்க்காவல்  படையிலும் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் சேர்ந்து பணியாற்றினர். இதன் பின்னர் தான் முஸ்லிம்களின் மீதான விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் குறையத் தொடங்கின.
இன்னொரு வரவேற்கத்தக்க திருப்பமும் கிழக்கு மாகாண முஸ்லிம்களிடையில் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் தாக்குதல்களைச் சமாளிக்க ஒன்றுபடுவதன் தேவையை இம்மக்கள் உணர்ந்தனர். அதன் காரணமாக உருவானதுதான் “இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்” என்ற அமைப்பு. உருவான சில ஆண்டுகளிலேயே இந்த அமைப்பு கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மிகப் பெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அக்கரைப்பற்று, சம்மாந்துரை, கல்முனை, காத்தான்குடி, எறாவூர், வாழைச்சேனை, ஒட்டமாவடி, மூதூர், சாய்ந்த மருது ஆகிய இடங்களில் இந்த இயக்கத்திற்குப் பெரும் ஆதரவு கிட்டியது. ஜனாப் அஷ்ரப் இந்த இயக்கத்தின் பெருந்தலைவராக விளங்கினார். (இவரும் விடுதலைப்புலிகளால் பின்னர் கொல்லப்பட்டார்) இலங்கையில் உள்ள சிங்கள அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சியிலும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பங்கு பெற்று வருகிறது. இலங்கையில் போர் ஓய்ந்துள்ள நிலையில் இனி செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிச் சிறிது ஆராய்வோம். தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட இலங்கை அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்குவதன் மூலம் பிரச்னைகளை ஓரளவு தீர்க்க முடியும். இதற்கு கிழக்கு, வடக்கு மாகாணங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் உடன்படவே செய்வர்.
தனி ஈழத்தை ஆதரிக்கா விட்டாலும், தமிழர்கள் நடத்தும் உரிமை போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு அளிக்க முஸ்லிம்கள் தயாராகவே உள்ளனர். தமிழர்களுக்கும், தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தற்போது நிலவிவரும் தப்பெண்ணங்களைத் தீர்க்க தமிழர் தலைவர்கள் உண்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முஸ்லிம்களை சம்மாக நடத்தத் தயங்குவது, அவர்களின் தனித்துவத்தை ஏற்க மறுப்பது போன்ற கொள்கைகளைத் தமிழ் அமைப்புகள் முற்றாகக் கைவிட வேண்டும். விடுதலைப்புலிகள் போன்ற பாசிச மனப்பான்மை கொண்ட போராளி இயக்கங்களைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். இது போன்ற அமைப்புகளால் தமிழர்களுக்கு விளைந்திட்ட கேடுகளே மிகுதி. நன்மைகள் குறைவு என்ற உணர்வு தமிழ் மக்களிடையே ஏற்பட வேண்டும். ஜனநாயக முற்போக்கு சக்திகளே தமிழ் அமைப்புகளின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக ஆயுதப் போராட்டங்கள் மூலமே தமிழர் பிரச்னைகளைத் தீர்க்க இயலும் என்ற சிந்தையிலிருந்து விடுபட வேண்டும்.
கிழக்கு, வடக்கு மாகாண முஸ்லிம்களைப் பொறுத்த அளவில் பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. விடுதலைப்புலிகளின் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் மறு வாழ்வுப் பணியில் இலங்கை அரசு ஈடுபட வேண்டும். புத்தளம் மாவட்டத்தில் உள்ள அகதி முகாம்களில் கடந்த இருபது ஆண்டுகளாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாண முஸ்லிம்களை வாக்குறுதி அளித்தபடி அவர்களின் சொந்த ஊரில், சொந்த வீட்டில் குடியமர்த்த இலங்கை அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேற்கோள் நூல்கள்
1.      வ.ஐ.ச.ஜெயபாலன் “தேசிய இனப்பிரச்னையும் இலங்கை முஸ்லிம்களும்”
2.    விக்டர் எழுதியுள்ள “முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்”
3.    டாக்டர் எஸ்.எம்.கமால் எழுதியுள்ள “முஸ்லிம்களும், தமிழகமும்”
4.    ஹிந்து ஆங்கில நாளிதழ் தேதி 28.12.2009
5.    தினத்தந்தி நாளிதழ் 18.11.2009
6.    சமரசம் ஜனவரி 16-31   2010 இதழ்

இந்த கட்டுரையினைப் படித்த இலங்கை நாவலாசிரியர் ஜனாப் ஆர்.முஹம்மது நௌஷாத் அவர்கள் விடுதலைப் புலிகளால் இலங்கை தமிழ் முஸ்லிம்கள் அடைந்திட்ட இழப்புகள் பற்றிய விரிவான குறிப்பு ஒன்றினை நமக்கு அனுப்பியிருந்தார். இதனை இலங்கையிலுள்ள மெஸ்ரோ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. வாசகர்களின் கவனத்திற்காக அந்தக் குறிப்புகளை அப்படியே கீழே கொடுத்துள்ளோம்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட இனரீதியான வன்முறைகளினாலும், அடக்கு முறைகளினாலும் வடக்கு கிழக்கில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் பல்வேறு பட்ட கோணங்களில் பாதிப்படைந்திருக்கின்றார்கள். இவற்றைத் தொகுத்து தருவதன் மூலம் ஆவணப்படுத்த விரும்புகின்றோம்.
1987இல் மூதூர் உதவி அரசாங்க அதிபர் படுகொலை, மூதூர் அகதி முகாம் மீது கோரத் தாக்குதல். 1987ஒக்டோபர் மூதூரில் 52 பேர்கள் கொலை, 138 பேர் படுகாயம் 20,000 பேர் அகதிகளாயினர். 300 வீடுகள், கடைகள், பள்ளிவாசல்கள், 4 பாடசாலைகள் சேதம் 1400 இலட்சம் ரூபா இழப்பு.
1987நவம்பர், ஏப்ரல் கிண்ணியா 35பேர்கள் கொலை, 138பேர் காயம். 22,000 பேர் அகதிகள், 200 வீடுகள், கடைகள்,5பள்ளிவாசல்கள், 3 பாடசாலைகள் சேதம். ரூபா.1100இலட்சம் இழப்பு.

ஏறாவூர்  - 1988 பெப்ருவரி, 5பேர் கொலை, 15பேர்கள் காயம், 1பள்ளிவாசல், 1பாடசாலை சேதம்.
காத்தான்குடி-1988 ஜனவரி, பெப்ருவரி-67பேர்கள் கொலை, 53பேர்கள் காயம். 17,000பேர் அகதிகளானர். 100 வீடுகள், கடைகள், 6பள்ளிவாசல்கள், 1பாடசாலை சூறையாடல், ரூபா 1100 இலட்சம் இழப்பு.
கல்முனை 1987 செப்டம்பர், டிசம்பர், 1988 ம ர்ச், 1989 ஏப்ரல், மே... 50பேர்கள் கொலை, 143பேர் காயம், 17,000 பேர்கள் ஒவ்வொரு தாக்குதலின் போதும் அகதிகளாயினர். 35 வீடகள் கடைகள், 12 பள்ளிவாசல், 1 அறபிக்கலாசாலை சேதம். ரூபா.11,000 இலட்சம் இழப்பு.
சாய்ந்த மருது, மாளிகைக்காடு, 1988 மார்ச்..... 17பேர் கொலை. 75பேர் காயம், 12,000 பேர்கள் அகதிகளானார்கள். 50வீடுகள், கடைகள் 1பள்ளிவாசல், 1 பாடசாலை சேதம். ரூபா.90இலட்சம் இழப்பு.
ஒட்டமாவடி 1987 டிசம்பர், 88பேர்கள் கொலை, 183 பேர்கள் காயம். 13,000 பேர்கள் அகதிகளானார்கள். 100 வீடுகள், கடைகள், 4 பள்ளிவாசல்கள் சேதம்.
சம்மாந்துறை 1989..... 21பேர்கள்படுகொலை, 126 பேர்கள் காயம், 32,000 பேர்கள் அகதிகளானார்கள். 627 வீடுகள், கடைகள் சூறையாடல், 3 பள்ளிவாசல்கள், 1 பாடசாலை தீவைப்பு, ரூபா.25,000 இலட்சம் இழப்பு.
1989 நவம்பர் 17.... காரைதீவில் வைத்து 43 பொலிசார் சரணாகதி அடைந்த நிலையில் படுகொலை அக்கரைப்பற்றைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் எம்.ஐ.அலிதுமான் படுகொலை.
இதற்கிடையில் தமிழ் ஆயுத அமைப்புகளுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் முரண்பாடுகளும் சந்தேகங்களும் அதிகமாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி டாக்டர் பதியுத்தீன் மஃமூத் தலைமையில் விடுதலைப்புலிகளுடன் 1988 ஏப்ரலில் சென்னையில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இவ்வொப்பந்தமானது அன்றைய முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி செயலாளர் நாயகமாக இருந்த எம்.ஐ.எம்.முஹிதீன், விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவரும் மத்திய குழு உறுப்பினருமான சதாசிவம் கிருஷ்ணகுமார்(கிட்டு) இருவரும் ஒப்பமிட்டிருந்தனர். இதில் நாம் நிகழ்த்துகின்ற உரிமைப் போரானது இலங்கை தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் சுதந்திரத்தினையும் சமத்துவத்தினையும், சுபிட்சமான வாழ்வையும் பெற்றுத் தருவதற்கான போராட்டமாகும். எமது தேசிய விடதலைப் போராட்டப் பாதையில் இன, மத, பிரதேச வேறுபாடுகளற்ற சகல மக்களினதும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். எமது போராட்ட இலக்கில் நாம் இழந்த நிலத்தை மீட்டெடுப்பதும், இருக்கும் நிலத்தைக் காப்பாற்றுவதும் அவசியமாகும். தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய மண்ணில் முஸ்லிம்களின் நிலம்தான் அதிகம் பறிபோய் இருக்கிறது. எனவே இழந்த மண்ணில் ஒர அங்குலத்தைக் கூட விட்டுக் கொடுக்காது மீட்பது என்ற எமது போராட்ட இலக்கானது முஸ்லிம்களின் உரிமைக் குரலையே முதன்மைப்படுத்துகின்றது. தமிழ் தேசிய இனத்துக்குள் தனித்துவமான கலை, கலாசாராம், பண்பாடுகளைக் கொண்ட இலங்கை வாழ் முஸ்லிம்கள் அச்சம், ஐயப்பாடுகளிலிருந்து கலை கலாசாரம், பண்பாடு மதம் போன்றவற்றை போற்றி வளர்க்கவும், பாதுகாக்கவும் அனைத்து உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் தமிழ் ஈழவிடுதலைப் புலிகளாகிய நாம் உத்திரவாதம் அளிக்கின்றோம் என்ற கூறிவிட்டு அவ்வொப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு நேர் மாறாகவே புலிகள் முஸ்லிம்களிடம் 1990 களில் நடந்து கொண்டனர். அத்துடன் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இனம் காணப்பட்ட 18அம்சங்களில் 1வது விடயம்.
1.இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமிழ் மொழியையே பேசுபவர்களாக இருப்பின் அவர்கள் வேறுபட்ட தனித்துவத்தைக் கொண்ட தமிழ் தேசியத்தினுள் உள்ளடங்கிய ஒரு இன்குழு என்பதையும், வடகிழக்கு மாகாணம் ஏனைய தமிழ் பேசும் மக்களது பாரம்பரிய தாயகமாகவுள்ளது போலவே முஸ்லிம்களது பாரம்பரிய தாயகமாக உள்ளது என்பதையும் ஏற்றுக் கொள்கின்றோம், எனக்கூறிவிட்டு 1990களில் ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாசாவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் காரணமாக விடுதலைப் புலிகள் 1989 மே தொடக்கம் 90 சூன் வரையிலும் ஆதிக்கம் செலுத்தினர். அப்போது ஒப்பந்தத்தில் ஏள்கப்பட்ட அனைத்து அம்சங்கங்களையும் உதாசீனப்படுத்தி தனித்தமிழ் தேசியத்தினுள் மேலாதிக்கம் செய்யப்பட்ட ஒரு இனமாக முஸ்லிம்கள் வாழ நரைப்பந்திக்கப்பட்டனர். பின் 1990 சூன் 12இல் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட யுத்தத்தின் பின் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் பிரகடனப்படுத்தப்பட்ட இனச் சுத்திகரிப்பு, அழிப்பு யுத்தத்திற்கு பலியானார்கள். யாழ்ப்பாணம் சோனகத்தெரு தொடக்கம் பொத்துவல் வரை வாழ்ந்த முஸ்லிம்களும் இதில் அடங்கும் அவையாவன.
1990சூலை 14இல் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு நாடு திரும்பிய 65க்கும் மேற்பட்ட ஹஜ்ஜாஜிகளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒந்தாச்சிமடம் எனும் இடத்தில் வைத்து படுகொலை செய்தனர்.
1990 ஆகஸ்ட் 03ல் காத்தான்குடி பள்ளிசாலில் தொழுது கொண்டிருந்த 167 முஸ்லிம்களை வணக்க நிலையில் வைத்து விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட இராணுவத் தலைவர்களில் ஒருவராக இருந்த ரஞ்சித் அப்பா என்பவரின் தலைமையிலான குழு படுகொலை செய்தது.
1990 ஆகஸ்ட் 05ல் அட்டாளைச் சேனையில் 15முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1990 ஆகஸ்ட் 12ல் ஏறாவூர் சதாம் குசைன் கிராமத்தைச் சுற்றிவளைத்து தூக்கத்திலிருந்த முஸ்லிம்கள் 173பேரை படுகொலை செய்தனர். பொலநறுவை அழிஞ்சுப்பொத்தானை கிராமத்தில் நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுடன், பச்சிளம் பாலகர்களையும் விட்டுவைக்காது புலிகள் படுகாலை செய்தனர்.
1990 ஆகஸ்ட் 12ல் சம்மாந்துரை கிராமத்தில் மாத்திரம் 1984 தொடக்கம் 1991 வரை 132 முஸ்லிம்கள் தமிழ் ஆயுதக்குழுக்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
30.01.1990ல் சிரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் எம்.வை.எம்.மன்சூர் அவர்கள் விடுதலைப் புலிகளால் பகிரங்கமாக சுட்டுக் கொல்லப்பட்டு அவரது ஜனாசா கூட வழங்கப்பட்டவில்லை.
1990 ஆகஸ்ட் 13ல் கொலனி முஸ்லிம்கள் மீது தாக்குதல் 5பேர் பலி, 1990 சூன் கல்முனை அக்கரைப்பற்று கொத்துவில், பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றி 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் பொலிசார் சரணாகதியடைந்த நிலையில் படுகொலை. 1990 சூலை 07ல் பொலநறுவை மாவட்ட புத்தூர் கிராம முஸ்லிம்கள் மீது தாக்குதல், 17பேர் கொலை, 200பேர் காயம், 500 பேர் அகதி.
1990 சூலை7ல் அக்கரைப்பற்றில் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த 58பேர் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டமை. 1990 ஒக்டோபர் 22-31 வரை மன்னார் மாவட்டத்திலிருந்து முஸ்லிம்கள் அனைவரும் பலவந்தமாக வெறுங்கையோடு வெளியேற்றப்பட்டனர். அகதிகள் 50,000, 1990 ஒக்டோபர்.முல்லைத்தீவு முஸ்லிம்கள் அனைவரும் பலவந்தமாக வெறுங்கையோடு வெளியேற்றப்பட்டனர். அகதிகளாக் கப்பட்டோர் 3000 பேர்கள்.
1990 நவம்பர் யார் முஸ்லிம்கள் அனைவரும் பலவந்தமாக வெறுங்கையொடு வெளியேற்றப்பட்டனர். அகதிகளானோர் 40,000 பேர் வடக்கில் பூர்வீக குடிகளான தமிழ் மக்களுடன் ஐக்கியமாகவும் அவர்களது போராட்டத்துக்கு ஏற்ற வித்த்திலும் தடையில்லாமல் இருந்த முஸ்லிம்களை ஜேர்மனி சரித்திரத்தில் வரும் ஹிட்லர் போல “முஸ்லிம்” என்ற இன அடையாளத்திற்காக மாத்திரம் தமது பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
1991 ஆகஸ்ட், சம்மாந்துறையில் 6பேர் கொலை, 1991 செப்டம்பர் பொலநறுவை பள்ளியகொடல்லயில் 16பேர் கொலை, 1991 ஜனவரி சூரத்தான்குடி கல்முறை பைசிக்கிள் குண்டுவெடிப்பு. 12பேர்கள் கொலை.
இச்சம்பவங்களின் பின்னர் இலங்கை வரலாற்றில் நீண்ட காலமாய் வழக்கத்தில் இருந்து வந்த தமிழ் பேசும் மக்கள் என்ற கருத்தியலை திட்டவட்டமாக முஸ்லிம்கள் நிராகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இச்சிந்தனை வடக்கு கிழக்கு முஸ்லிம்களை தமிழர்களின் ஆதிக்கத்துக்கும் அடங்கு முறைக்குமிடையெ சிறைப்படுத்தி வைப்பதற்கான ஒரு சொற்றொடர் என்பது அனுபவங்களினூடே நிருபிக்கப்பட்டது. மேலும் யாழில் செய்தது போல் இனச்சுத்திகரிப்பை கிழக்கில் செய்ய முடியவில்லை. இக்காலகட்டங்களில் தம் வாழ்நாளில் என்றுமே அறிந்திராத பெரும் உளவியல் தாக்கங்களுக்கு, முஸ்லிம் உட்பட்டனர். ஒவ்வொரு முஸ்லிமும் தான் முஸ்லிம் என்றே ஒரே காரணத்திற்காகவே கொல்லப்படுவோம் என உறுதியாக நம்பினார்.
இவ்வராற்றினூடே கடந்த காலங்களில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட இன அழிப்பு, இனச்சுத்திகரிப்பு பொருளாதார அழிவு, கலாசார பண்பாட்டு உளத்தாக்கங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கள் போன்றவற்றிலிருந்து சிங்கள இனவாத சக்திகள் தமிழ் மக்களை அடக்கியதற்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் கடந்த கால வடகிழக்கு முஸ்லிம்களின் வாழ்வும் இருப்பும் தமிழ் தேசியவாத சக்திகளினால் அடக்கி வைக்கப்பட்டது. சிங்கள இனவாதம் தமிழ் மக்களை நசுக்குகின்றது என்ற காரணத்துக்காக ஆயுதம் ஏந்திய தமிழ் குழுக்கள் திட்டமிட்டு சிறுபான்மையான முஸ்லிம்களை நசுக்கிய வரலாறு, முஸ்லிம்கள் தம்மைப் பாதுகாப்பதற்கான ஒரு அரசியல் அதிகாரப் பிராந்தியத்தைக் கோருவதற்கான நியாயமான அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது. இதுவே வடக்கு கிழக்கில் நீடித்த ஐக்கியத்தையும், சமூக வாழ்வையும் உறுதிப்படுத்த முடியும்.
இது மெஸ்றோ நிறுவனம் ஒலுவில் நடாத்திய “வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் எதிர்காலமும், இளைஞர்களின் பங்களிப்பும்” எனற தலைப்பிலான கருத்தரங்கின் போது வெளியிடப்பட்டது. 11.03.2002 வெளியீடு . மெஸ்றோ நிறுவனம்.

முடிந்தது.
                                   
மீண்டும் இன்னொரு படைப்போடு சந்திப்போம்.

5 செப்டம்பர், 2012

தமிழ் ஈழமும் முஸ்லிம்களும் - பகுதி 4


தமிழர்களின் உரிமை மீட்புப் போராட்டங்களுக்கு முஸ்லிம்கள் ஆதரவளித்த போதிலும், அவர்களின் தனி ஈழக் கோரிக்கையைக் கிழக்கு மாகாணத்தில் வசித்து வந்த முஸ்லிம்கள் ஏற்கவில்லை. (வடக்கு-கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பகுதிதான் ஈழம்) ஒன்று பட்ட இலங்கையில் ஜனநாயகப்பூர்வமான முறையில் அறவழிப் போராட்டங்களை நடத்துவதன் மூலமே பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என நம்பினர்.
தனி ஈழத்தில் தங்களது நலன்கள் பாதுகாப்பாக இராது என்றும் ஒன்று பட்ட இலங்கையில் மட்டுமே தாங்கள் பாதுகாப்பாக வாழ முடியும் என்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எண்ணினர். ஆனால் தமிழ்ப் போராளிகளின் எண்ணம் வேறு விதமாக இருந்த்து. மொழி அடிப்படையில் முஸ்லிம்கள் தனி ஈழத்தை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர். தங்களிடமுள்ள ஆயுத வலிமையைப் பயன்படுத்தி முஸ்லிம்களைத் தங்களது கோரிக்கையை ஏற்குமாறு செய்ய முடியும் என நம்பினர். 1980க்கும் 1990க்கும் இடைப்பட்ட இந்த பத்து ஆண்டுகள் தமிழ்ப் போராளிகளின் வாழ்க்கையில் மட்டுமல்ல முஸ்லிம்களின் வாழ்க்கையிலும் திருப்பங்கள் நிறைந்த காலமாகவே இருந்த்து. இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் அரசுப் படையினருக்கும் பெரும் மோதல்கள் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இலங்கைப் படையினரை எதிர்த்துப் போராடி அதே நேரத்தில் தங்களுக்குள்ளும் இந்த இயக்கங்கள் போரிட்டுக் கொண்டன. இந்தச் சகோதர யுத்த்த்தில் (!) விடுதலைப்புலிகளின் (LTTE) கையே மேலோங்கியது. பிற போராளிக் குழுக்களைச் சார்ந்த தலைவர்களை ஒருவர் விடாமல் தேடிக் கண்டுபிடித்து விடுதலைப்புலிகள் கொன்றழித்தனர்.
அரசியல் ரீதியில் போராடிய தமிழ்த் தலைவர்களான அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், உமா மகேஸ்வரன் ஆகியோரையும் விடுதலைப்புலிகள் விட்டு வைக்கவில்லை. விடுதலைப் போர்க்களத்தில் தாங்கள் மட்டுமே இருக்க வேண்டும் பிற இயக்கங்கள், தலைவர்கள் யாருமே இருக்க்க் கூடாது என்ற பிரபாகரனின் பாசிஸ மனப்பான்மையே இந்த ஈவு இரக்கமற்ற படு கொலைகளுக்குக் காரணமாகும். ஒரு பக்கம், பிற போராளிக் குழுக்களைச் சார்ந்த முன்னணித் தலைவர்களையெல்லாம் அழித்துக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் கோபப் பர்வை கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மீதும் திரும்பியது. ஈழக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்காத முஸ்லிம்களுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினர். விளைவு? 1980க்கும் 1990க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் முஸ்லிம்கள் மீதும் பெரும் தாக்குதல்கள் நடத்தினர்.
முஸ்லிம்களின் தொழில் நிறுவனங்கள், பயிற்சி நிலையங்கள், கல்வி நிலையங்கள், வங்கிகள் ஆகிய அனைத்தும் தாக்குதல்களுக்கு உள்ளாயின. தமிழர் பகுதிகளுக்கு வியாபாரத்திற்காகச்  சென்ற சிறு வியாபாரிகளும், வயல்களுக்குச் சென்ற சிறு கூலித் தொழிலாளர்களும், “சிங்கள அரசுக்கு உளவு செல்பவர்கள்என்று குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர். இத்தனை வன்முறைகளுக்கும் உச்சகட்டமான 3.8.1990 அன்று காத்தான்குடி என்ற ஊரில் உள்ள கிராவல் தெரு பள்ளிவாசலில் காலை தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது விடுதலைப்புலிகள் வெளியிலிருந்து இயற்திரத் துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டு 103 பேரைக் கொன்றனர்.
அதே ஊரில் உள்ள குசைனியா பள்ளிவாசலும் தாக்கப்பட்டது. எறாஊர், கிரான்குளம், அழிஞ்சிப் பொத்தான், அகமதுபுரா, பள்ளிகொடா ஆகிய ஊர்களிலும் விடுதலைப்புலிகள் முஸ்லிம் தெருக்களில் புகுந்து தாக்கி ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றனர்.
யாழ்ப்பாணம் நகரில் வசித்து வந்த 70,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், விடுதலைப்புலிகளின் பயமறுத்தல் காரணமாக தங்களது வீடு, வாசல்கள், நிலபுலன்களை விட்டு விட்டு வெளியெற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. “இரண்டு மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் இல்லையெனில் உங்களின் உயிர் மிஞ்சாதுஎன்ற விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக இம்மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறி ஓடினர்.
கடந்த இருபது ஆண்டுகளாகப் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அகதி முகாம்களில் இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். (27.12.2009 அன்று கொழும்பில் நடைபெற்ற அனைத்து இலங்கை முஸ்லிம்கள் காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றி இலங்கை ஜனாதிபதி இராஜபக்ஷே, இம்மக்கள் தங்களது சொந்த வீடுகளில் 31.5.2010க்குள் குடியமர்த்தப்படுவார்கள். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்துள்ளார். ஆதாரம் ஹிந்து நாளிதழ் 28.12.2009)     (தெடரும்.....

4 செப்டம்பர், 2012

தமிழ் ஈழமும் - முஸ்லிம்களும் - பகுதி 3


பிளவின் தொடக்கம்
இலங்கையில் அனைத்து மாகாணங்களிலும் வாழும் முஸ்லிம்கள் தமிழைத் தாய் மொழியாக்க் கொண்டவர்களே. சிங்களத்தை தாய் மொழியாகக் கொண்டவர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையினரே. தொடர்ந்து பன்னெடுங்காலமாகத் தமிழர்களுக்கும் (தமிழ் பேசும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள்) முஸ்லிம்களுக்கும் நல்லுறவே நிலவி வந்துள்ளது. எந்த விதமான பிணக்குமின்றி இரு சமூக மக்களும் அமைதியாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்த நல்லுறவைக் குலைக்கும் வண்ணம் சில நிகழ்ச்சிகள் நடந்தேறின. தமிழ்ப் பிரமுகர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சைவ வேளாள சித்தாந்தம், இந்த நல்லுறவின் அடித்தளத்தை ஆட்டம் காண வைத்தது. இந்த சித்தாந்தத்தைப் பிரச்சாரம் செய்தோர் சைவ வேளாளர்களை உயர்வாகவும் மற்றவர்களைத் தாழ்வாகவும் கற்பித்தனர். முஸ்லிம்களைத் தூய்மையற்றவர்கள் என்றும் தொப்பி புரட்டிகள் என்றும் இழிவுபடுத்தினர்.  பொன்.ராமநாதன் போன்ற தமிழ்த் தலைவர்கள், “முஸ்லிம்கள் தனிப்பிரிவினர் அல்லர் அவர்கள் தமிழர்களே” என்று முஸ்லிம்களின் தனித்துவத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். சைவ வேளாள சித்தாந்தவாதிகளின் இந்தப் புதிய நிலைப்பாடு முஸ்லிம்களிடையே அதிருத்தியை ஏற்படுத்தியது. கொழும்பு மாவட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் வணிகத்தில் சிறப்புற்று விளங்கியது. பிற சிங்கள தமிழ் வணிகர்கள் மத்தியில் பொறாமையை ஏற்படுத்தியது. 1915 ஆம் ஆண்டு கொழும்பு நகரின் பல இடங்களில் சிங்களர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இந்த வணிகப் போட்டி காரணமாக மோதல்கள் வெடித்தன.
முஸ்லிம் வணிகர்கள் பலர் சிங்களர்களால் கொல்லப்பட்டனர். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்தக் கலவரங்களின் போது தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிராகவும் சிங்களர்களுக்கு ஆதரவாகவும் இருந்தனர். ஆனால் அப்போதிருந்த ஆங்கிலேய அரசு நடுநிலையுடன் செயல்பட்டது. கலவரத்திற்குக் காரணமான சிங்களர்கள் பலர் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். கொலைக் குற்றங்களில் ஈடுபட்ட சிலருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால் பொன்.ராமநாதன் போன்ற தமிழர் தலைவர்கள் லண்டன் சென்று மகாராணியைச் சந்தித்து சிங்களர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்துச் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். தமிழர் தலைவர்களின் இந்தச் செயல் முஸ்லிம்களிடையில் கசப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.
1889 ஆம் ஆண்டு வரை இலங்கை சட்ட சபையில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் இருந்த்து, இதில் முஸ்லிம்கள் யாரும் நியமிக்கப்டவில்லை. முஸ்லிம்கள் தாங்கள் ஒரு தனித்துவமான சமூகம் என்றும் தங்களுக்குத் தனிப்பிரதி நிதித்துவம் வேண்டும் என்றும் ஆங்கில அரசிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்தக் கோரிக்கைக்குத் தமிழர் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். முஸ்லிம்கள் தமிழர்களே எனவே அவர்கள் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தில் அடங்குவர் என்றனர். எனினும், முஸ்லிம்களின் இடையறாத போராட்டம் காரணமாக சட்டசபையில் தனிப் பிரதிநிதித்துவம் பெற்றனர். இப்படி சமூக, தொழில் அரசியல் ரீதியாகவும் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் பிளவுகள் தோன்றின. இலங்கை விடுதலை பெற்ற பிறகு, அங்கு நாடாளுமன்ற ஜனநாயகம் அறிமுகப்படுத்தப்பட்டு அனைவருக்கும் வாக்குரிமை என்ற நிலை ஏற்பட்டது. முஸ்லிம்கள் சிங்களர்கள் நடத்தும் அரசியல் கட்சிகளில் இணைந்து தெற்கிலும், கிழக்கிலும் சில இடங்களைக் கைப்பற்றி சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றனர்.
1960க்குப் பின்னர், கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. ஏராளமான முஸ்லிம்கள் கல்வி கற்றனர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் முஸ்லிம் பாடசாலைகள் அரசின் உதவியுடன் தொடங்கப்பட்டன. அப்போது, இலங்கையின் கல்வி அமைச்சராக இருந்த பதியுத்தீன் மஃமுத், முஸ்லிம்கள் நடத்தும் பாடசாலைகளில் அரபி மொழி கற்றுக் கொடுக்க ஆலிம்களை நியமித்தார். அரசின் இத்தகைய ஆக்கபுர்வமான நடவடிக்கைகள் காரணமாக முஸ்லிம்கள் பெருமளவு கல்வி கற்று ஆசிரியர்களாகவும், அரசுத் துறைகளிலும் வேலை வாய்ப்பினைப் பெற்றனர். முஸ்லிம்கள் பெருமளவு அரசுப்பணிகளில் சேர்ந்த அந்தக் காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் தமிழர்களே உயர் அதிகாரிகளாக இருந்தனர். புதிதாகப் பணியில் சேர்ந்த முஸ்லிம்களை அந்த அதிகாரிகள் நியாய உணர்வோடும், நடுநிலையோடும் நடத்த வில்லை என்ற குற்றச்சாட்டு முஸ்லிம் ஊழியர்களிடமிருந்து எழுந்தது ஏற்கனவே இருந்த கசப்புணர்ச்சி காரணமாக இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் என முஸ்லிம்கள் நம்பினர்.
விடுதலைக்குப் பின்னர் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த சிங்கள அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வண்ணம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டன. 1953ஆம் ஆண்டு, பௌத்த சமயமே அந்நாட்டின் அரசாங்க சமயமாக அறிவிக்கப்பட்டது. சிங்களமே ஆட்சி மொழியாக இருக்கும் என சட்டம் கொண்டு வரப்பட்டது. 1972ஆம் ஆண்டு சிங்கள பௌத்தர் மட்டுமே அந்நாட்டின் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வரமுடியும் என சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதன் பின்னர் கல்வியைத் தரப்படுத்துதல் (Standardization of Education) என்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் படி தமிழர்களை விட சிங்களர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றால் போதும் அவர்களுக்கு உயர் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற நிலை தோன்றியது. சிங்கள பௌத்த அரசியல் தலைவர்களின் இந்தச் செயல்கள் தமிழ் மக்கள் மத்தியில் தங்களது எதிர்காலம் பற்றி ஐயங்களைத் தோற்றுவித்தன. தந்தை செல்வா, பின்னர் அமிர்தலிங்கம் போன்ற தமிழ்த் தலைவர்கள் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து அறவழிப் போராட்டங்களைத் தொடர்ந்து பல ஆண்டுகள் நடத்தினர். எனினும் இலங்கை அரசின் போக்கில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் அறப்போராட்டங்கள் மூலம் தங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க இயலாது என்ற முடிவுக்கு வந்த தமிழ் இளைஞர்கள் தங்களுக்கிடையே பல்வேறு அமைப்புகளைத் தோற்றுவித்தனர். 1977ஆம் ஆண்டிற்குப் பிறகு டெலோ, எல்.டி.டி.ஈ, இ.பி.ஆர்.எல்.எப், பிளாட், பேராடென், ஈராஸ், டி.பி.எல்.எஸ். ஆகிய போராளி இயக்கங்கள் தோன்றின. இந்த இயக்கங்கள் ஆயுதப் போராட்டம் மூலமே இலங்கை அரசைப் பணிய வைக்க முடியும் என நம்பின. தவிரவும் இலங்கை அரசு தமிழர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காது. எனவே இலங்கையில் தமிழ் ஈழம் என்ற தனி நாடு ஒன்றை உருவாக்குவதே தங்களது இலக்கு என வெளிப்படையாக அறிவித்தனர். இந்தத் தனி நாடு அறிவிப்பிற்குப் பின்னர் இலங்கை அரசுக்கும், தமிழ்ப் போராளி இயக்கங்களுக்குமிடையே மோதல்கள் அதிகரித்தன.        (தொடரும்......

3 செப்டம்பர், 2012

தமிழ் ஈழமும் - முஸ்லிம்களும் - பகுதி- 2


தினமணி நாளிதழில் பாவை சந்திரன் தொடர்ந்து எழுதிய “ஈழத்தமிழர் வரலாறு” தொடரிலும், தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த “இலங்கைத் தமிழர் வரலாறு” என்ற தொடரிலும் தமிழ் முஸ்லிம்கள் பட்ட வேதனைகள், இன்னல்கள் பற்றிய குறிப்புகள் ஏதும் இடம் பெறவில்லை என்பதையும் தமிழ் முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்ல தமிழ் சமுதாயம் அனைத்தும் கவலையுடன் நோக்க வேண்டும்.
இந்நிலையில் இலங்கைத் தமிழ் முஸ்லிம்களின் பூர்வீகம் பற்றியும், தமிழ் ஈழம் பற்றிய அவர்களின் நிலைப்பாடு பற்றிறும் அறிந்து கொள்ள வேண்டிய இன்றைய அவசரத் தேவையாகும். கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே இலங்கையில் முஸ்லிம்களின் குடியேற்றம் நிகழ்ந்த்தாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக் ஆளுநர் ஹஜ்ஜாஜ் இப்னு யுசுபின் கொடுங்கோன்மை காரணமாக 226 அரபு முஸ்லிம் குடும்பங்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறி கடல் மார்க்கமாக இந்தியாவின் தென் பகுதியிலுள்ள கொற்கை வந்து (தற்போதைய காயல்பட்டிணம்) அங்கேயே தங்கி வாழலாயினர். சில ஆண்டுகளுக்குப் பின் இங்கு வந்த அரபுக் குடும்பங்களில் சிலர் பக்த்து நாடான இலங்கைக்குச் சென்று குடியேறினர். அங்கு சென்ற இம்மக்கள் இலங்கையின் பூர்வீக மக்களோடு திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். பின்னர் இஸ்லாமிய இறை நேச்ச செல்வர்கள் (கல்வத்து நாயகம் போன்றோர்) வணிகர்கள் ஆகியோரின் பரப்புரை காரணமாக ஏராளமான தமிழ் மக்கள் இஸ்லாத்தில் இணைந்தனர். தென் தமிழகத்திலிருந்தும் பல்வேறு காலகட்டங்களில் தமிழ் முஸ்லிம்கள் இலங்கையில் குடியியேறினர்.
இலங்கை மக்கள் தொகையில் 7.12 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள். 1981ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி முஸ்லிம்களின் மக்கள் தொகை பத்து லட்சத்து ஐம்பத்து ஆறாயிரம் ஆகும். (10,56,000) தற்போதையக் கணக்கெடுப்பின்படி இது 15 லட்சத்தை எட்டியிருக்கக்கூடும். முஸ்லிம்களில் அறுபது சதவிகிதத்தினர் இலங்கையின் தெற்கு (கொழும்பு) மேற்கு மத்திய மாகாணங்களில் வசித்து வருகின்றனர்.  ஆனால் இம்மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிதறிக் கிடக்கின்றனர். இதன் காரணமாக அரசியல் ரீதியாக ஒரு பெரிய சக்தியாக உருவெடுக்க இம்மக்களுக்கு வாய்ப்பு இல்லாது போயிற்று.
இதற்கு நேர் மாறாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை, மட்டகளப்பு, திரிகோணமலை, வன்னி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளக்கூடிய அளவிற்குக் கணிசமான செறிவுடன் வாழ்ந்து வருகின்றனர். அம்பாறை, மட்டக்களப்பு, திரிகோணமலை, வன்னி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் முறையே 42, 24, 29, 27 என்ற சதவிகித அளவில் முஸ்லிம்கள் உள்ளனர். ஒரே இடத்தில் அதிகச் செறிவுடன் வாழும் காரணத்தால் இம்மக்கள் அரசியல் ரீதியில் ஒரு சக்தியாக உருவெடுக்க முடிந்தது. கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் சிறு நில உடைமையாளர்களாகவும், நெசவாளர்களாகவும், மீன் பிடிப்பவர்களாகவும் (நீண்ட கடற்கரை அமைந்துள்ளதன் காரணமாக) இருந்தனர். இஸ்லாமிய சமய மரபுகளைக் கடைப்பிடிப்பதில் அதிக கவனம் கொண்டவர்களாகவும்,  சமூகக்கட்டுப்பாடும் இறுக்கமான உறவுகளும் கொண்ட மக்களாகவும் இப்பகுதி முஸ்லிம்கள் விளங்கினர்.
தலைநகர் கொழும்பிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் பெரும் வணிகர்களாக இருந்தனர். இதன் காரணமாக பொருளாதாரத்தில் இவர்கள் பிற மாகாணங்களில் உள்ள முஸ்லிம்களைக் காட்டிலும் சிறப்புற்று விளங்கினர். கொழும்பில் உள்ள சிங்கள தமிழ் வணிகர்களோடு இவர்கள் போட்டி போடும் நிலையிலும் இருந்தனர். மேற்கு மத்திய மாகாணங்களில் வசித்து வரம் முஸ்லிம்கள் சிறு வணிகர்களாகவும், கைவினைஞர்களாகவும் சிறு குடிசைத் தொழில்கள் செய்பவர்களாகவும், விளங்கி வந்தனர். விடுதலைக்கு முன்னரும், விடுதலை பெற்ற பின்னரும் பல ஆண்டுகள் தெற்குப் பகுதி முஸ்லிம்களே (கொழும்பு) அரசியலில் ஓரளவு பங்கு பெற்று வந்தனர். கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படாத அந்தக் கால கட்டத்தில் இந்தத் தெற்கு மாகாண முஸ்லிம் அரசியல் பிரமுகர்களே அவர்களுக்கு வழிகாட்டினர்.   (தொடரும்......

2019 டிசம்பர்